நீலகிரி: உதகை அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆனிக்கல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 பேரில் இதுவரை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசின் சார்பில் தலா ரூ.4 லட்சம் நிதியுதவி பெற்றுத்தரப்படும் என நீலகிரி ஆட்சியர் அம்ரித் அறிவித்தார்.
உதகை அருகே சீகூர் வனப்பகுதியில் அமைந்துள்ள ஆனிக்கல் மாரியம்மன் கோயிலில் நேற்றைய தினம் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக உதகை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், நேற்று மாலை அந்த தீப திருவிழாவில் பங்கேற்று வெளியே வரும் போது அங்குள்ள ஆனிக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஆற்றை கடக்க முயன்ற ஜெக்கலொரை கிராமத்தை சேர்ந்த சரோஜா(65), வாசுகி(45), விமலா(35), சுசீலா(56)4 பெண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அவர்களில் 3 பேர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மேலும் மாயமான ஒரு பெண்ணை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், ஆனிக்கல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசின் சார்பில் தலா ரூ.4 லட்சம் நிதியுதவி பெற்றுத்தரப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் கூறியுள்ளார்.